16.08.20-செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

16.08.20-செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்

 












Sl

எண் 

புகைப்படம்

கவிதை

1

482

செவ்வானத்தில் ஒரு நட்சச்திரம் மயக்குதே!

இயற்கை அழகில் ரசித்து மகிழ்ந்தேன்!

ஓடும் மதிக்கு துணையாக போகுமே !


மேகம் கருத்தால் காணாமல் போகுமே!

இருளில் வெள்ளி முளைத்தது விண்ணில்!

இறைவனின் படைப்பு நினைத்து வியந்தேன்.


 தஞ்சை கோ பாலசுப்ரமணியன்

2

213

இயற்கை அன்னையின் இன்னொரு விந்தை //

இறைவனே படைப்பின் மிகப்பெரிய  தந்தை //

ஆழ்ந்து பார்த்தால் அதிலொரு நட்சத்திரம் //


காட்சிக்கு ஏற்ற அதிசய கதாபாத்திரம் //

அவ்வப்போது இனிய நிறங்களில் மாறிடும் //

அவனியில் மக்களை மகிழ்வித்துப் போயிடும்


கவி.மரு.ஜெயக்குமார் பலராமன்.

3

582

அண்டம் மிதக்கும் ஆதவன் இருளை/

உண்ட போழ்தில் உலகம் ஒளிர,/

வெண்ணெய் உண்ட கண்ணன் வாயில் /


விண்ணில் விளையும் வித்தை யாவும்/

பண்ணில் விரிந்து படரும் காட்சியும்/

கண்ணில் மிளிரும், கவிதை தளிருமே/


நெடுவை இரவீந்திரன்

4

745

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் பச்சைக்கொடி /

காட்டியே மீதமானவர்களை இரவுக்கு வரவேற்கிறது /

நிலவோடு நாமும் ஒளியை உமிழ்ந்திடுவோம்/


பூமாதேவியை இருளில் தவிக்க விடாமல்/

மானிடர் எம்மைக் கைகூப்பி வணங்கட்டும்/

வாழ்க வளமுடன் என்றே வாழ்த்துகிறது.

க.சுலோஜனா

5

483

இயற்கை வனப்பில் இதயம் தொலையும்/1

எங்கும் இன்பம் எழிலாய் விளையும் /2

உருகி ஓடும் தங்கப் பிழம்போ /3


நிரம்பி வழியும் மஞ்சள் குழம்போ /4

செவ்வான நட்சத்திரம் சிரிக்கும் சித்திரம் /5

நாளும் நிகழும் நவரச நாடகம் / 6

ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை

6

716

செவ்வானத்து நட்சத்திரம் வந்தது விடிவெள்ளியாய் 

ஒளிவீசி வரவேற்றது நம்பிக்கை நட்சத்திரமாய்

மகிழ்ச்சியை அள்ளித்தரும் அட்சயப் பாத்திரம்


மனக்கவலைப் போக்கும்  அதிசய மந்திரக்கோல்

எத்தனைமுறைப் பார்த்தாலும் சாகாவரம்பெற்ற சரித்திரம் 

மடியில்போட்டுத் தாலாட்டும் வானத்து தேவதை.


- நாகை. ஹாஜா

7

746

செவ்வானத்திலொரு நட்சத்திரம் சிவந்ததிங்கு அடிவானம்/

கொடுக்குமோ மின்பிரபை மிடுக்காக உறவை/

கிடைக்குமே இதில் பேர் இன்பம்/


மணக்குமே அதில் தேன் வாசம்/

நினைக்கவே ஊறுது தேன் இன்பம்/

நிலையாக வாழ்ந்திடத் தா இன்பம்/


-- மௌஜீத் ஏ ஹசன்--

8

247

வானத்து நட்சத்திரமே வட்ட நிலவே /

உன்னை நினைக்காத நாளில்லை சுற்றும் /

பூமியாய் நானும் உன்னைச் சுற்றி/


வருகின்றேன் நீயோ கண்டும் காணாமல்/

செல்கின்றாய் நாணத்தால் மேகத்தின் ஊடே/

ஒளிகின்றாய் காதலின் முடிவைச் சொல்லிடு/


த.காமராசு.,தாராசுரம் கும்பகோணம் 

9

614

பெற்றோர் விலகிக்கியதால் அனாதை இல்லங்கள்/ 

கருணை உள்ளங்களால் அவர்களது வாழ்க்கை/

உறவுகள் இல்லா தனிமை உலகம்/


செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் போலே/

இயற்கை அளித்த உன்னத படைப்பு/

அன்னை தெரஸா வடிவில் கண்டோம்/


விஜயலட்சுமி

10

224

🌿அந்திவானத்தில் தோன்றிடும் அழகியதொரு நட்சத்திரம்

🌿முந்திக்கொண்டு மூடிமறைக்கும் ஓடும் மேகமும்/

🌿இயற்கையின் விந்தையை என்னவென்று சொல்வது/


🌿செயற்கையின் அழகெல்லாம் கணநேரத்தில் வீழ்வது/

🌿நிலவுப்பெண் பார்வையில் கண்சிமிட்டும் நட்சத்திரங்கள்/

🌿உலவிடும் விண்மீன்கள்உறங்குவதும் எப்போதோ/


க.குணசேகரன்

11

348

கண்ணிருக்கும் மனிதனின் அறிவுக்குப் புரியாது //

செவ்வான நட்சத்திரம் கடன் வாங்குவது //

வானத்தின் பின்னணியின் வண்ணத்தைப் பார்த்து //


மானத்தை மறைக்க மேகத்தைக்  கோர்த்து //

ஒளிவட்ட சூரியனிடம் முகத்தைச் சீர்படுத்தி//

கண்சிமிட்டி ஏமாற்றுகிறதே காலையும் மாலையும் //


உடுமலை ராமர்

12

280

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் வெள்ளி//

ஆறுமாதம் ஒருதிசையென்று மாறிமாறி நிற்கும்//

முன்னிரவு பின்னிரவாய் பிரித்து வருடமும்//


மார்கழியில் உழவனின் விளக்கொளியாய் விடியற்காலையில்//

ஆடியில் விதைக்க திசைகாட்டியாய் எதிர்த்து//

ஒன்பது கோளில் ஒன்றாய் நின்றது//


கோட்டீஸ்வரி ராமசாமி

13

480

அந்தி சாய்கிறதே  சிவந்த அடிவானில்

அங்கொரு நட்சத்திரம் அழகாய் தோன்றுகிறதே

உழைத்து களைத்து  உட்காரும் நேரமிது


உடலின் வலி உள்ளமது அறியாது

ஆனாலும் ரசிக்கிறது அசதியெல்லாம் மறக்கிறது

வெள்ளி முளைக்கையிலே மீண்டும் கீழ்வானில் 


கலைச்செல்வி

14

743

கண் அயர்ந்து நான் உறங்க/

கனவில் அவளது நினைவு அலைகள்/

நேரில் வந்தாள் எனை எழுப்ப/


அவளின் புன்னகை முகம் நிழலாட/

செவ்வானத்தில் தோன்றிய நட்சத்திரம் போலே/

தூக்கம் கலைந்து நிழல் நிஜமானது/


இளங்கோ

15

344

திக்குத் தெரியா அடர்ந்த காட்டினிலே

காரிருள் மட்டுமே உரித்தான சொத்தாய்

வலிகளும் வறுமையும் வசையுமே வாழ்வாக


அல்லாடிய என்னைத் தாலாட்டிட வந்தாயே

செவ்வானத்தில் தோன்றிய நட்சத்திரம் போல

என் வாழ்விலும் இதம் தந்தாயே!


#எமா#

16

317

வானம் கொஞ்சம் அழகாக இருந்தது//

தானம் செய்வது  கடலும் அலையும்//

மேகம் திரண்டது ஓவியம் வரைந்தது//


கானம் இசையில் மீன்கள் வந்தது//

நாணம் கொண்டு  நிலவு ஒளிந்தது//

மேளம் இசைக்க விடியல் வந்தது//


க.ச.சந்திரசேகரன் சங்கரலிங்கம், அவிநாசி

17

636

பள்ளியில் படித்தபோது தோன்றிய பாசம்/

பருவத்தில் தொடர்ந்தது கல்லூரியில் நேசம்!//

தோழியின் நினைப்பிலே காலமும் கழிந்தது  !//


வாழ்வினில் கிடைப்பது அரிதாகிப் போனது!//

செவ்விலக்கியத்தில்  என்னவள் கவிதையாகிப் போனாள்!//  

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் ஆனாள்!


சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி

18

750

நாள் மயங்கும்  மாலைப் பொழுதிலே..!

நிலாப்பெண் சூடிய மலர் மாலையிலே..!

நில்லாது உதிர்ந்த மல்லிகை பூப்போலே..!


நட்சத்திரம் ஒன்று மின்னியது செவ்வானத்திலே..!

கதிரவன் மறைந்து  இருள்கூடி வருகையிலே..!

காட்சியழகை காண்போர் இருதயமோ மகிழ்ச்சியிலே..!


- தமிழ் வேந்தன்...✍

19

747

ஆகாய நெற்றியின்  அழகு பொட்டுடென//

செவ்வானம் தோன்றுதே சிவந்த மேனியாள்//

இருளை நீக்கி ஒளிரும் வெண்ணிலா//


மனத்திரை விலக்கி மோக வலைவீசி//

மவுன மொழியில் மலரும் காதல்//

மண்ணில் நிலைத்து வாழ்ந்திடும் என்றுமே//


ஜெ.சுகமணியன், வாழப்பாடி

20

259

பிரகாசிக்கும் நட்சத்திரம் கண்களுக்கு காட்சி.../

வாழ்வின் உயர்வுக்கு உழைக்க முயற்சி.../

சோம்பலில் விளையும் தோல்வியின் வீழ்ச்சி.../


தன்னம்பிக்கை மனதுக்கு தரும் எழுச்சி.../

அனுபவங்கள் வழங்கும் நல்லதொரு பயிற்சி.../

வெற்றி மகுடம் ஏற்படுத்தும் மகிழ்ச்சி...!/


ஜெயலெட்சுமி மாணிக்கம்

21

256

இருளை வானம் தழுவிக்கொண்டு இருப்பதை/

எழும்பிய கதிரவன் பார்த்துச் சிவந்தான்/

கொடுங்கதிர் வீசி கோபத்தைக் காட்டினான்/


செவ்வானம் ஆகி மரங்களும் சிவந்தது/

கோள் மூட்டியது இந்த நட்சத்திரமாய் இருக்குமோ/

கூட இருந்தே ரசித்துச் சொலிக்குதே/


      .......நட்புடன் ஜெயபால் வி.பி.

22

618

வான் வெளியில் வகை வகையாய்/

வரையறை இன்றி வருவதும் போவதும்/

வெண் நட்சத்திரங்களின் வேடிக்கைச் செயலே/


வடிவங்கள் பல  கண்ணில் தெரிந்தாலும்/

என் வாழ்வுக்கு  ஒளி தந்திடும்/

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரமாய் நீயே/


ஔவை.

23

450

நந்தவனச் சோலையிலே செவ்வந்தி மாலையிலே

நான் மட்டும் தனிமையிலே தவித்திருக்க

இளமையின் கனவுகளில் இதயமும் மயங்கிட


கற்பனையில் என்னவளும் கரங்களை விரிக்க

செவ்வானமாய் விரிந்த காதலியின் மடியிலே

நட்சத்திரமாய் பூத்திருந்தேன் விடிகின்ற வரையிலே!


ரேணுகா சுந்தரம்

24

461

காலைக் கதிரவன் கண்மூட அயர்ந்தான்/

மேலை திசையின் மேனியெலாம் செம்மை/

சேலை வெண்மையில் தெரிந்தால் வெண்ணிலா/


பாலைச் சிரிப்பாய் பாரது முழுவதும்/

தண்ணொளி வீசினாள் வெண்ணொளி பேசினாள்./

மண்ணொளிப் பெற்றது மக்களும் மகிழ்வுறவே./


கோ அருச்சுணன்

25

760

வானம் பூத்த வண்ண மலர்கள் ....

தங்க ஆற்றில் துள்ளும் மீன்கள் .......

செவ்வானச் சிறையில் சிக்கிய மான்கள் ........


நிலவு வரைந்த நிறைந்த ஓவியம் ........

மின்னி மறையும் இரவு விளக்கு .........

அதுதானோ செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் ......


கிழக்கு வானம் முஸ்தபா மெளஜூத்

26

671

சிறகுவிரித்த சூரியப்பறவை கிழக்கு திசைகிழித்து

மேற்கின் முதுகில் அமரும் அழகுக்காலை...

கோபச் சிவப்பாய் செவ்வானம் சிவக்க


கண்சிமிட்டும் ஒற்றை நட்சத்திரம் அவளை

அடையாளம் காட்டியது சாக்கடை சமூகத்தில்

பூத்துக் குலுங்கும்    நறுமனமலர் இவளென...


கி.அருள்குமரன். தலைஞாயிறு.

27

616

இயற்கையின் அழகை எப்படி வரைவேன்

சிவப்பு செவ்வானமும் சிமிட்டும் நட்சத்திரமும்

என் கற்பனையை மயக்கி விட்டது


காதல் கொண்டு காவியம் படைக்கிறேன்

விண்மீன் வருகையால் வெட்கப்படுகிறது வானம்

கரு மேகங்களின் நடன ஆர்ப்பாட்டம்


கா.கேமலாரூபினி

28

578

அந்திமாலை சூரியன் பேரழகாய் ஆர்ப்பரிக்க//

இருள் சூழ்ந்து நானிலம்  ஒளியிழக்க//

சில்லென்றத் தென்றலில் மென்மேனி சிலிர்த்திட//


காலத்தோடு கலைந்த காதல் நினைவுகள்//

மனதோடு உறவாட விழிகளும் வியந்திட//

நிலவோடு உதித்ததே  செவ்வானில் நட்சத்திரம்//


...கவியாசகன்...!!!

29

652

சூரியன் வீட்டிற்கு செல்லும் வேளையிலேயே!/ 

வானமோ மாறியது பெரும் சிவப்பாய்/ 

திடீரென ஒற்றை நட்சத்திரம் தலைகாட்டியது/


நிலவு வரும் முன்னே வந்ததேனோ?/

நிலவின் பூனை படைத்தளபதி இதுவோ?/

என்று வானமும் அமைதிக் கொண்டது/


கூ.மு.ஷேக் அப்துல் காதர்

30

312

அழகில் மயங்கி த் தானே உனைக்//   1

காண ஓடோடி வரும்போது நான்//  2

கீழே விழ என்னவர் எனைத்||   3


தாங்கிப் பிடிக்க நானோ வெட்கத்தில்.  4

தலை கவிழ்ந்து மகிழும் நிலையில். 5

எங்கள் மனங்கள் சங்கமம் ஆனதே.


பொ.சுப்புலட்சுமி தேவகோட்டை

31

726

காலைக் கதிரவன் கண் அயர/

செவ்வானிலே உதித்தான் வெண்மை பாலகன்/

காண்பவருக்கு எல்லாம் மாயங்கள் செய்பவன்/


காரிருளிலே முடியாத முற்றுப்புள்ளியான முதல்வன்/

அழகிய வானிலே மின்னியே அசைந்தாடுபவன்/

‌நிலவின் தனிமைக்கு தலையணையாய் தவமிருப்பவன்/


-காளிராஜ்பாலகணேஷ்

32

741

தானத்தால் சிவந்த வள்ளல்கை வானம்//

பால்வீதி முளைத்த விண்மீன் நெருஞ்சி//

நிலவாய் சிரித்தவள் செவ்வாய் இதழ்கள்.//


இருளாய் இருப்பது வறியவன் வாழ்கை//

விடியல் வந்தது கிழக்குக்கு மட்டுமே//

எப்போது முளைக்கும் ஏழ்மையில் வெள்ளி?//


 பி.கே.சாமி.

33

261

ஆதவன் மறைந்ததும் இருள் கவிழ்ந்ததே

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் பிரகாசிக்கிறதே

காரிருள் வானில் விண்மீன்கள் ஒளிர்கின்றனவே


பிறைமதியும் பாலொளி வீசியே நகர்கிறதே

மக்கள் மனதினில் மகிழ்ச்சி ஊறுகிறதே

சீவன்கள் யாவும் உறைவிடம் சேர்ந்தனவே !


~ வள்ளல் இராமமூர்த்தி

34

373

செவ்வானம் சிவந்திட நட்சத்திரம் ஒலித்திட

இயற்கை அழகிலாட இதமாகத் தென்றலாட

மனதிலே இசையாட உள்ளமே மலர்ந்தாட


கனவிலே கண்களாட காட்சிகள் கவர்ந்தோட

உன்னோடு நானாட என்னோடு நீயாட

இளந்தென்றல் வீசிட மரங்களும் ரீங்காரித்தன!!!


ஜயந்தினி வாகீசன்

35

707

சிந்தையில் ஊறிய உன் முகமே.!

சிரிப்பினில் என்றும் என் அகமே.!

செந்நிற வானத்து விண் மீனே.!


செக்கச் சிவந்த என் மானே.!

கன்னங்கள் குழிவிழும் உன் அழகே.!

எண்ணங்கள் குவிந்திடும் பெண் அழகே.!


✍️பா.ச.கண்ணன்

36

246

சூரியன் மறைய சிவந்தது வானம்

இரவின் வரவை குறிக்கும் தாரகை

அழகாய் ஒளிர்வது இயற்கையின் படைப்பே


அந்தியின் மாலை ஆதவன் மறைய

சந்திரன் வருவான் இரவினில் உலாவ

விந்தைகள் தானோ விடியும் வரையில்.


செல்வம் செல்வகுமார்

37

310

சந்திரன் வருகையால் சட்டென வானம் 

சிந்திய சிரிப்பே சிதறிக் கிடக்குதோ?

வைரப் பூக்களாய் வானில் சொலிக்குதோ?


வாடா மலர்களாய்த் தானே பூக்குதோ?

பரந்த வானிலே பால்நிலா நினைப்பது

உறங்காது நிற்குமந்த  ஒற்றை வீண்மீனையோ?


எம்.ஆர்.செயந்தி

38

613

இறைவன் படைப்பை இதயம்   ரசிக்கும்//

விண்ணில் பார்க்கும் விந்தையாவும் ரசித்திடவே//

செவ்வானத்தில்  ஒரு நச்சத்திரம் கண்சிமிட்டியது//


காலத்தால்  அழிந்த நினைவுகள் நிழலாட//

இளமையின் கனவுகள் இதயம் கணக்க//

என்னவரை எண்ணி பயணம்   தொடர்ந்தேன்//


ஜெயாசந்திரமோகன்

39

287

ஆதவனின் ஒளியினால் மறைந்திருக்கும் விண்மீன்கள்

அந்திக் கருக்கலிலே தெரியத் தொடங்கின

சிந்திக்க வைக்கிறது சமூகத்தின் நீதியை


ஆண்களின் ஆதிக்கத்தில் அடங்கியிருக்கும் பெண்கள்

அறிவிலும் ஆற்றலிலும் சொலிக்கின்ற  விண்மீன்கள்

வெளிவந்து தங்கள் வெளிச்சத்தைக் காண்பிப்பீர்


தண்டபாணி

40

201

கதிரவன் களைப்போடு கடலினில் கலந்திட /

செவ்வானம் சிவந்தது தாரகை வரவுக்காய் /2

செக்கச் செவேலென்று சிரித்தது வானம் /


சந்திரனை வரவேற்க சந்தோச ஊர்வலமோ /

விந்தைகள் புரிந்தே வியக்க வைக்கிறது /

வானும் மண்ணும் கூடியே மகிழ்ந்திட//


புவனா சற்குணம்  கனடா

41

709

 

வானம் விளைவித்த  மல்லிகைப்  பூவொன்று// 

அந்திநேரம்  பூத்திட அவசரம் என்னவோ// 

கீழ்வானம் சிவந்தது உந்தன் வரவிலே// 


முழுமதி வீழ்ந்தது உந்தன் அழகிலே// 

செவ்வான அழகினைக் கண்டிட விரைந்தாயோ// 

குழந்தைகள் மனம் குளிர்விக்க  வந்தாயோ// 


தாழை. இரா. உதயநேசன்

42

210

செக்கச் சிவந்ததே நீல வானம்..../

வெட்கம் வந்ததோ பெண்ணிலவைக் கண்டு..../

வானத்து விண்மீன்கள் கோபங் கொண்டதே...../


வெண்மதிக்குப் போட்டியாக பெண்ணிவளைக் கண்டு..../

அருகில்வர அஞ்சியே அவளழகைக் கண்டு.../

கண்சிமிட்டி அழைத்ததேகார்முகிலைத் தூதுவிட்டு..../


திருமதி சுப்ராணி சிவகுமார்....✍

43

737

அருக்கன் மறையவே அந்தி தோன்றிட/

அன்றில் பெடையுடன் கூடு புக/

கீழ்வானம் சிவந்ததே கீழைக்காற்றும் சுழன்றதே/


செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் தன்/

சிவந்த வாயால் புன்னகை சிந்தி/

சேர்ந்தே மகிழ்ந்திட சிரித்தே அழைத்ததே/


திருமதி சரோஜனி நடேசன்

44


வடக்கு கருத்திருக்கு வான்மேகம் சூழ்ந்திருக்கு/

வான்மேகம் கலைப்பதற்கு வான்கதிர் வந்திருக்கு/

கிழக்கு விடிந்திருக்கும் கீழ்வானம் சிவந்திருக்கு/


விடிந்த செவ்வானில் விடிவெள்ளி ஒன்றிருக்கு/

காலை கதிரவன் கண்விழிக்க காத்திருக்கு/

கதிரவனைக் காண விடிவெள்ளி விழித்திருக்கு/


மு, துரைப்பாண்டியன்

45

207

விழிகளின் வசந்தத்தில் எழில்தவழும் காட்சிகள்/

தேடும் உள்ளத்தில் தெரியும் கனவுகளாய்/

வாடும் முகத்துக்குஆறுதலைத் தரும்/


ஓடும் மேகங்களாய் கூடும் ஆசைகள்/

செவ்வானத்தில் தோன்றும் நட்சத்திரங்களாய் ஜொலிக்கும்

ஆனந்த கங்கையாய் மனம் ஆராதிக்கும்/


-முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages