11.12.20- கதையின் பெயர் : நாவினால் சுட்டவடு - தென்குமரிக் கவிதைக்களம்

சனி, 12 டிசம்பர், 2020

11.12.20- கதையின் பெயர் : நாவினால் சுட்டவடு



கவிச்சிகரம் அமுதன், தமிழ்நாடு



நாவினால் சுட்டவடு(சிறுகதை)


லட்சுமியோட அண்ணன் மகளுக்குக்காதுகுத்து விழாவாம் அண்ணன்


நேரில வந்து சொல்லிட்டுப்போச்சு குலதெய்வம் கோயில்ல


கெடாவெட்டு காதுகுத்துக்கலியாணம் ஊரெல்லாம்


பத்திரிக்கை வைச்சிகூப்புட்டுந்தாரு அவருக்கு ஒரேமகள்


ரொம்பநாளு கழிச்சிப்பொறந்த குழந்த அதுநால


எல்லா ஏற்பாடுகளும் அமோகமா இருந்துச்சு


போறதாவேணாமான்ற பேச்சுக்கே எடமில்ல


போயித்தானாகனும் புருசன்னுக்கு மனசில்ல அனுப்ப


இருந்தாலும் போயிட்டுவா இல்லாட்டினா சொல்லிக்காட்டுவாகன்னாரு


பொம்பளைபுள்ளையாச்சேன்னு ரெண்டுபவன்ல சங்கிலி


ஏற்கனவே வாங்கிவச்சது இருந்துச்சு எடுத்துக்கிட்டுக்கிளம்பினா லட்சுமி


சொந்தபந்தமெல்லாம் வந்திருந்தாக வெள்ளனாவே கெடாவெட்டிச்


சமையல் நடந்துக்கிட்டுருக்கு காலையில் பொங்கல் போட்டிருந்தாக


லட்சுமி கோயில் வாசல்ல வாரதைப்பாத்துட்டு ஒடிவந்து


வாம்மா மாப்பிள்ளை வரலியான்னு கேட்டாரு


இல்ல அவருக்கு ஏதோ முக்கியமான சோலியிருக்காம்


வரமுடியலன்னு சொல்லச்சொன்னாரு சாப்புடும்மான்னு


கூட்டிட்டுப்போய் பொங்கல் வைக்கசொன்னாரு


கூடப்பொறந்த தங்கச்சி மீனாவும் வந்திருந்தா வாக்கா மாமா வரலியான்னு கேட்டா ஒனக்குத்தெரியாதா


அவரு வகுசி இங்க வாரதுன்னா அவருக்கு வேற சோலிவந்துடும் அவரு அப்புடித்தேன் திருத்தமுடியாதசென்மம்னா


தங்கச்சியோட மகன் வந்து அவசேலையப்புடிச்சி இழுத்தான். இந்தா பெரியம்மா வந்திருக்கு பாருடான்னா மீனா


ஆசையா மடில தூக்கிவைச்சிக்கிட்டா லட்சுமி


செல்லம் பட்டுன்னு கொஞ்சினா .


தூரத்துல சொந்தம் ஒண்ணு


இவளைக்காட்டி ஏதோ சொல்றமாதிரி தெரிஞ்சது


சாடை பேச ஆரம்பிச்சிட்டாக வழக்கம்போலன்னா மீனா


கெடக்குறாக விடுக்கா அதெல்லாம் காதுலவாங்கப்புடாதுன்னா


அடுத்து காதுகுத்துற விழா தாய்மாமன் மடில வைச்சி


காதுகுத்தத்த யாரானாக. சீரெல்லாம் வைச்சிருந்தாக


ஆசாரி முன்னாடி கொழந்தயோட ஒக்காந்திருந்தாரு தாய்மாமன்


ஆசாரி காதுல சந்தனத்தை வைச்சிட்டு காதுகுத்தபோனாரு


கொழந்த அழுக ஆரம்பிச்சிடுச்சு சமாதானம் பண்ணிக்


காதைக்குத்தினாக வாயில வாழப்பழத்தை ஊட்டிவிட்டாக.


இப்போ சீர் செய்யிற நேரம் லட்சுமி கொண்டாந்த ரெண்டுபவன் சங்கிலிய


எடுத்து கொழந்தைக்கிப்போடப்போனா அவளோட அண்ணன் சம்சாரம்..மதினி இரும்மா


மொதல்ல மீனா போடட்டும் அப்புறமா நீபோடுன்னா


அண்ணன் அதிர்ச்சில என்னா சொல்றன்னார்


காரணமாத்தேன் சொல்றேன்னா புரிஞ்சிடுச்சு லட்சுமிக்கு


நமக்குப்பிள்ளையில்லாதத குத்திக்காமிக்கிறா மதினின்னு


பொத்துக்கிட்டு வந்திருச்சு அழுக அடக்கமுடியாம


விருட்டுன்னு போய் ராக்காயி மண்டபத்துலபோய் குலுங்கிகுலுங்கி அழுதா காதுகுத்துற எடத்துல ஒரேசத்தம்


அங்க அண்ணன் பொண்டாட்டிய அடிச்சிபுட்டானாம்


அவ ஒருபக்கம் கோவிச்சிட்டுப்போய் அழுகுறா


ஏழரைய இழுக்குறதுக்குன்னே வாராளுக எடுவட்டவகன்னு அண்ணனோட மாமியா இன்னொரு ஏழரைய இழுத்துவிட்டா......


மலடிக எல்லாம் என்னாத்துக்கு முந்துராளுக பொறுமை வேணாமா இதுல முந்துனாப்போதுமா... அதுல முந்திருக்கனும் அதுல்ல கவுரதைன்னா....விடாம


நீ வாய மூடுறியா இல்ல செவில்ல விடட்டுமான்னாரு அவ புரிசன்


இதுக்கொண்ணும் கொறச்சலில்லன்னு முணுமுணுத்தா அவ......


லட்சுமிதங்கச்சிக்கி அக்காவப்பாக்க பாவமா இருந்துச்சு.....


லட்சுமிக்கி அஞ்சுவருசத்துக்கு முன்னாடி பொண்கொழந்தபொறந்துச்சு ஒருவயசு ஆகுறப்ப விசக்காய்ச்சல்ல செத்துப்போச்சு


அதுக்கப்புறம் ஒன்னும் தங்கல ஆசுபத்திரிக்கு அலைஞ்சிட்டுருக்கா


அவளுக்கு செத்துபோன பொண்ணு ஞாபகம் வந்துடுச்சு


என்ன இப்புடிப்பண்ணிட்டியே கருப்புன்னு அழுதா சாமி முன்னாடி


அவள யாராலும் தேத்தமுடியல மீனா மகன் வந்து சேலைய இழுத்தான் பேம்மா எனக்கு முட்டாயிவாங்கிக்குடுன்னு


அப்ப பனமரத்துல கெவுளி சொல்லிச்சி ச்ச்ச்ச்ச்ச்ச்ச் ந்னு


ராக்காயம்மன் சாமியாடி மூக்காயிக் கெழவிவந்து சொன்னா


சாமி உத்தரவுகொடுத்திருச்சு ஒனக்கு அடுத்தவருசம் தொட்டிலக்கட்டிடுச்சு சாமி


நீ புள்ளையோட கோயிலுக்கு வருவ கவலைப்படாத.....கண்ணத்தொடச்சிக்கன்னா


இது கருப்புமேல சத்தியமா நடக்குன்னா


அண்ணன் வந்து லட்சுமி மன்னிச்சிரும்மான்னாரு


வழிந்த கண்ணீரதொடச்சிக்கிட்டு சொன்னா லட்சுமி..........நான் தேன் புத்திகெட்டுப்போய் வந்துதொலைச்சிப்பிட்டேன் அவரு வேணாமுன்னுதான் சொன்னாருன்னு


முந்தானைய வாயில வைச்சி அழுதா


அப்ப அவளோட அண்ணன் சொன்னாரு


உனக்கு வேண்டுதலுக்குத்தான் பூசையே நீ வராம எப்படி..... எல்லாம் சாமி பாத்துக்கிடுமுன்னு கண்ணதொடச்சிவிட்டாரு


ஆனாலும் அவ கண்ணீர் நிக்கவே இல்ல.....


அ.முத்துவிஜயன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages