17.08.20-ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ - தென்குமரிக் கவிதைக்களம்

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

17.08.20-ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ










Sl

எண் 

புகைப்படம்

கவிதை

1

250


விருப்பத்தினை விரும்பியே பகர்ந்தே நகர்ந்தாய்//

வந்தேற்று மறுபடி சொல்லும் முன்னரே//

விரைந்தே சென்றாய் எங்கே ஆராயுமுன்//

வந்தாய் அன்றலர்ந்த இளஞ்சிவப்பு மலருடன்//

ஒற்றை மலரை கூந்தலில் சூட்டிய//


உந்தன் விரலில் இதழ் பதித்தேன்//

நடந்து முடிந்துவிட்ட நாடகம் இது//

கடந்து சென்றது காதலும் அதோடு//

எங்கே சென்றானோ ஒரு சொல்//

கேட்டு சொல்லுங்கள் ஓடும் மேகங்களே//


செல்வலஷ்மி

2

745


ஓடும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்களே/

நீங்கள் குளிர்ந்தாலே தண்ணீரைப் பொழிவீர்களே/

எங்கள் கண்கள் வரண்டாலே கண்ணீர்தான்/

காதல் தூது கொண்டு செல்வீரோ/

பஞ்சுத் திரளாய் மேனி  நொந்திடாமல் /


நடந்து வந்தவளைக் காணாமலே பரிதவிக்கிறேன்/

பன்னீரில் குளிப்பாட்டிப் பாதபூசை செய்வதற்கு/

வருவாள் என்றே ஆவலோடு காத்திருந்தேன்/

ஏமாற்றம் தந்து ஏங்க வைக்கிறாளே/

எந்தன் நிலைமையை எடுத்துச் சொல்வீர்களா?


க.சுலோஜனா

3

616


நீல வானமே முகில் கூட்டங்களே/

தவிக்கும் பேதைக்கு தூது செல்வாயோ/

நிலா வெளிச்சமும் நட்சத்திரப் பிரகாசமும்/

இல்லாது  ஒளி இழந்து இருக்கிறேன்/

பெண்ணவள் ஏக்கத்தை எடுத்து உரை/


காத்திருக்கிறேன் என்று விரைந்து கூறு/

காதல் கரை சேரா காவியமா/

நினைவுகளில் மட்டும் உடல் இயங்குகிறது/

உயிர் அளித்து உணர்வு கொடுக்க/

வரச் சொல் வெண் மேகமே/


கா.கேமலாரூபினி


4

344


வாய் ஓயாமல் உன்னுடன் வளவளக்க

வானளவு வார்த்தைகள் என் உள்ளத்திலே

வெட்ட வெளியில் வெட்டியாக நின்று

வெள்ளந்தியாக கத்திக் கத்தி உரைக்கின்றேன்

வெறுமனே தவழ்ந்து போகும் அந்த


வெண்மேகக்கூட்டம் உன் காதில் ஓதாதோ

என்ற நப்பாசையில் தூது அனுப்புகிறேன்

காற்றே, கார்முகிலே கைகொடு எனக்கு

கண்ணாளனைக் கண்டால் சேதி சொல்லிடு

கண்ணாட்டி நான் காத்திருக்கிறேன் என!


#எமா


5

210

வானகத்து மேகங்களே செல்வதெங்கேக் கூறுங்களேன்...//

வையகத்துத்  தாகமதைத் தீர்த்திடச் செல்கின்றனையோ...//

கானகத்து  மரங்களெல்லாம் காத்திருக்கு உனக்காக...

நானிருந்து தவிக்கின்றேன் நாயகனைக் காணாது....//

ஓடுகின்ற மேகங்களே வாடுதே என்தேகமுமே.....//


சென்றவனைக் காணவில்லை சேதியொன்றும் அறியேனே..

முன்றலிலே காத்திருந்து தென்றலையும் தூதுவிட்டேன்….

சென்றவனும் வரவில்லையே செப்பிடவும் தோழியில்லையே...//

வெண்மேகக் கூட்டங்களே என்நிலையைச் சொல்லிடவே...//

கொஞ்சநேரம் நில்லுங்களேன் கொண்டவனின் பேரைச்சொல்லிடவே....//

திருமதி சுப்ராணி சிவகுமார்......✍

6

207

ஓடும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்களேன்/

ஆசை தேவதையிடம் என்னன்பைச் சொல்லுங்களேன்/

பூத்திருந்த மலரெடுத்துக் காத்திருந்தேன்

வெகுநாளாய்/

காணும் காட்சிகளில் அவளின் நினைவுகள்/

கனவின் நகர்வுகளில் அவளின் பிம்பங்கள்/

தூக்கமின்றி தவிக்கும் துயரங்கள் கோடி/

பார்த்திருந்த பொழுதெல்லாம் பகல் கனவானது/

நேற்று வரைஅவள் நினைவே/

நெஞ்சின் ராகமாய்நிதமும் பாடியது/

அவளை வரச்சொல்லிஆனந்தகீதம் பாடுங்களேன்/


-முனைவர் கவியருவி ஜோதிபாரதி, தேனி.

7

428

முழுமதியைத்தவிக்கவிட்ட முண்டியடித்துக்கொண்டு       

முனைப்பாய்ப் போவதெங்கே முகிற் கூட்டங்களே.

முகிலைத்  துகிலாக்கி  முந்தானை போலாக்கும்

மதியைத்  தவிக்கவிட்ட   மாயமாய் மறைவானேன்

கார்மேகம் சூழ்ந்தாலே கனமழை வருமென்றே


கழனிகள் பூமியிலே கண்ணீரில் காத்திருக்க

அடைமழை அளிக்காமல்  அவசரமாய் செல்வதெங்கே

தாகந்தணிக்கத் தண்ணீரின்றி தரணியே காயுதே

ஓடுகின்ற மேகங்களே ஒருசொல் கேளுங்கள்

வாடுகின்ற எங்களுக்கு  வான்மழையை  தாருங்கள்.


சுப்பிரமணியன் அன்புமலர்.

8

726

காதல் மயக்கத்திலே அழகிய வெண்ணிலவு/

ஆசையாய் தனிமையிலே தவிக்கின்றது இரவினிலே/

மிதந்து வருகின்றமென்மை மேகங்களே/

உங்கள் காதினிலே கூறுவேன் கடவுச்சொல்லை/

காதலனின் முகவரியையும் காணாது தவிக்கிறேன்/


திருடப்பட்ட இதயத்தையும் தேடியே துடிக்கிறேன்/

தூரத்து விண்மீனாய் பயணங்கள் தொடர்கிறேன்/

தொடர்பில் இணையாத மன்னவனை நினைக்கிறேன்/

முத்தான முகில்களே இன்னும் செல்லவில்லையோ/

என்னுடைய அன்பினை நீங்களும் கூறவில்லையோ/


-காளிராஜ்பாலகணேஷ்

9

755

ஓரிடத்தில் நில்லாமல் ஓடுகின்ற மேகங்களே!

வானத்திலே போடுகின்ற ஓவியத்தைப் பார்க்கின்றேன்!

நாள்தோறும் விதவிதமாய் வரைகின்ற கோலங்களைக்

காண்பதற்கு கண்ணிரண்டு போதாது எந்தனுக்கு!

உன்னழகில் மயங்குகின்ற என்மனதின் வேதனையை


உன்னிடத்தில் கூறுகிறேன் செவிமடுத்துக் கேளாயோ!

என்னருமைக் காதலியின் பிரிவினாலே வாடுகிறேன்

வழியினிலே விழிபட்டால் வலியதனைக் கூறாயோ!

மண்ணுலகில் உலவுகின்ற பெண்ணிலவு என்னவளின் 

அழகினிலே உனையிழந்து எனைமறந்து போகாதே!


      - ஜெயக்குமார் சுந்தரம்        

10

280

கரைந்து மழையாய் கொட்டும் கருமேகமே//

அசைந்து செல்லாமல் எதற்கு அவசரம்//

ஓடுகிறாயா சற்று நின்று ஓய்வெடு//

உன்னிடத்தில் ஒரு சொல் கூறுகிறேன்//

கேட்பாயாச் செவிகொடுத்து  செவ்வனேச் செயல்பட//


விவசாயம் செழிக்க வேண்டிய நேரத்தில்//

மிதமாய் பெய்வாய் மிகைநீர் அழிவே//

பரவலாய் பருவத்தில் பசியாறச் சொரிவாய்//

அதிகம் கூறினால் அலுப்பு தட்டும்//

குளிர்ச்சியெனும் குணம் உன்னுடன் பிறந்தது//


கோட்டீஸ்வரி ராமசாமி

11

721

வானில் உலவும் வெண்ணிற மேகங்களே.

காணாக் காதலியைக் கண்டுவர ஊர்வலமோ.

கன்னியின் அடையாளம் என்னிடம் சொல்லுங்கள்.

கண்டால் உம்மிடத்தில் கட்டாயம் அனுப்பிடுவேன்.

நிலவை நெருங்காதீர் மறைந்தே மயக்கிடுவாள்.


காற்றைத் துரத்தாதீர் காதல் வீணாகும்.

வானத்தை விரும்பிட்டால் வாழ்வும் தூரமாகும்.

தண்ணீரைத் தழுவிட்டால் தரையில் இறங்கிடுவீர்.

இறங்கும் நேரத்தில் இடிமின்னல் வழியனுப்பும்.

பூமியும் தாங்கிடும் புதுவாழ்வும் பொங்கிடும்.


......பாலு தியாகராசன்....

12

636

தென்குமரிக் கரையோரம் தினமும் வருவீரோ?!

தேன்கவிச் சாரெடுத்துப் பருகத் தருவீரோ?! 

பிஞ்சுக் குழந்தைக்குப் பஞ்சுப்பொதி ஆவீரோ?!

கெஞ்சும் காதலர்க்குத்  தூதாய்ப் போவீரோ?!

தேடும் சுரங்களிலே பூபாளம் காண்பீரோ


நகரும் பொழுதினிலே நர்த்தனம் இடுவீரோ

கடலில் நீரெடுத்து மழையைத் தருவீரோ?!

வயலில் பயிர்களுக்குத் தாகம் தீர்ப்பீரோ?!

வருணன் சொன்னால் வாயைத் திறப்பீரோ?!

உருளும் மேகங்களே கருணைபுரிவீரோ?!


சுத்தமல்லி உமாஹரிஹரன் திருநெல்வேலி

14

462

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

உன்னைத் தவிர ஆறுதல் இல்லை/

ஆகையால் ஆத்திரம் கொள்ளாதே தோழியே.

அன்பை அள்ளித் தா எனக்கு/

ஆழ்கடல் சென்றேனும் உயிர் காப்பேன்/


அறிந்து கொண்ட காதல் இல்லை/

உணர்வினால் வந்த பாசம் இது/

பாலைவனமாய்ப் போகுமா நம் காதல்/

பாடசாலைசிநேகிதியின் கதை கேளாதே/

நம்பிக்கையுடன் என்னை நேசித்துப்பார்/

நல்வாழ்வு நாளை நிச்சயம் உண்டு


தயா

14

430

ஓடும் மேகங்களே சொல்  கேளீரோ //

சிவப்பு நிறப் பேரழகி என் //

சிந்தைப் புகுந்தவள் சினம் கொண்டிருக்கிறாள் //

கொஞ்சும் மேகமதைக் கொஞ்சம்  பஞ்சனையாக்கி //

நெஞ்சமதின் ஆசைகளை எடுத்துச் சொல்லியே //


கோபம் தணித்து குழவி மகிழ்ந்திடவே //

அனுப்புகிறேன் தூதெனவே துன்பம் துடைத்திடவே //

தூக்கம் தொலைத்து துணை எண்ணியே //

தவித்து நிற்கிறேன் தணியாத காதலுடன் //

இங்கிதமாய் இயம்பியேஇணைத்திடுவாய் எங்களையே 


பானுமதி இராஜேந்திரன், திருநெல்வேலி

15

727

போகும் இடமெல்லாம் நிழலாய் தொடர்ந்தே..//

இளமைக் கனவுகள் சுமந்து செல்கின்றாயே ..//

மனதில் பதிந்த  நினைவுகள் கலையுமுன் //

தூது செல்லுங்கள் கலையும் மேகங்களே //

கூடி அளவளாவி கதைகள் கதைத்ததை //


என்னவனின் விலாசத்தை கண்டுச் சொல்லுங்கள் //

இரவின் மடியில் உலகம் உறங்கிட //

உறங்காது விழித்திருக்கும் விழிகளிரண்டு விண்மீனாக 

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ//

வான் முகிலாய் சேர்ந்திருந்த காதல் காவியத்தை //


சுசி.

16

287

பரந்த விண்வெளியில் பஞ்செனப் பறக்கின்றாய்

ஒன்றையொன்று துரத்திட்டே ஓடி மகிழ்கின்றாய்

கண்நிறை மதியுடன் கண்ணாமூச்சி  ஆடுகிறாய்

நிறபேதம் பார்க்காது கருமேகத்தையும் அணைக்கின்றாய்

அண்ணாந்து பார்க்கின்ற ஆண்மயிலை ஆட்டுவிக்கிறாய்


இத்தனை செய்திட்டாயே எனக்கொன்று செய்வாயா

எங்கோ தொலைத்துவிட்ட காதலியைத் தேடுவாயா

மதியையொத்த முகமுடையாள் கார்மேகக் கூந்தலுடையாள்

தோகைமயில் போல் தளிர்நடை உடையாள்

கண்டால் சொல்வாயா காதலன் தவிப்பதை


தண்டபாணி

17

238

வானம் வளமாகி கார்மேகம் நிறைவாகும்../

நீர் நிலைகள் ஆவியாகி மேகமாகும்../

நீர்த் திவலைகளோடு மேகமாகும் தூசுகளால்../

கர்ப்பமுற்ற கார்மேகம் கனிவாகிட மழையாகும்../

கடற்பரப்பில் உதயமாகி கொடிப்பிடித்து நகர்கின்றாய்../


நலம் பயக்குதே நல்லமழை நாட்டினிலே../

அடைமழையால் அழிக்கின்றாய் அவனியிலே உயிர்களை../

போதுமே என்றாக போகாதே அத்திசையில்../

நிலமெங்கும் நல் விளைச்சல் உன்னாலே../

ஓயாமல் பெரு மழையால் அழிக்காதே../


#இளந்தை சேது

18

688

நிலவுக்கும்  உண்டு காதல் குணங்கள்/

மனிதருக்கு சொல்லி கொடுத்ததும்  இதுவே/

பௌர்ணமி நிலாவில் காதலர்கள் கூடிடுவார்/

மலர்கள் மலரும் நேரமும் இதுதானே/

வாசமும் நேசமும் சேர்ந்து சல்லாபிக்கும்/


காதலனோ காதலியோ வெறுத்த நேரமே/

ஓடும் மேகங்களை துணைக்கு அழைப்பர்/

கவலைகளை சொல்லி தூது   அனுப்புவர்/

பழகிய பொழுதினில் எல்லாம் சாட்சியாக/

நாளும் பொழுதும் ஓடும் மேகங்களே/


கீத்தா ராமன்

19

716

ஓடும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்

என்னவளைக் கண்டு என்நிலைக் கூறுங்கள்

தனிமையிலே வாடுகிறேன் தனிமரமாய் நிற்கின்றேன்

சென்றவளைக் காணாமல் சித்தமாறித் தவிக்கின்றேன்

பிடிக்கும் கொடியிடையாள் பிடிக்கொடா பேச்சுடையாள்


அசத்தும் அழகுடையாள் அன்ன நடையுடையாள்

அவள் சிரிப்போ சிந்தும் சில்லரை

மயக்கும் மாத்திரை சொக்கும் நித்திரை

அல்லும் பகலும் அவள் நினைப்பு

ஏங்கித் தவிக்குது என் உயிர்த்துடிப்பு.


- நாகை. ஹாஜா

20

450

தேகத்தில் மோகத்தீ மூட்டியவள் என்னுள்

காதலையும் பாசத்தையும் ஊட்டியவள் இதயச்சிறைக்குள்

இதுவரை இருந்தவளை இன்றோக் காணவில்லை!

ஓடும் நதியலைக்குள் காதலியைத் தேடினேன்!


அசைந்தாடும் பூங்கொடியிடம் காதோரம் கேட்டேன்!

இசை பாடும் வண்டினத்திடம் கேட்டேன்!

காற்றிலே கலந்து வானத்தையே அடைந்து

மேகத்திரையில் வெண்ணிலவாய் மறைந்தாளோ

சொல்லிடுங்கள்!

எனக்கெனப் பிறந்த பெண்ணிலவை என்னிடமே

அனுப்பிடுங்கள் காலமெல்லாம் தம்பதியாய் வாழ்ந்திடவே!


ரேணுகா சுந்தரம்

21

652

ஓடும் மேகங்களே என்னவளை கண்டுபிடிங்களேன்!/

காலம் எல்லாம் தனிமை கொடியதல்லவா?/

கடவுளே எனக்கென்ன படைத்தவளை காட்டுங்களேன்!/

கன்னியவள் எங்கே என்ன செய்கிறாளோ?/

பறக்கும் பறவையே கண்டுபிடிக்க உதவே!/


சுழலும் காற்றே கண்டறிய உதவே!/

நில்லாத மேகங்களே உதவிட கூடாதா?/

யாரை கேட்பதோ எங்கு முறையிடுவதோ?/

விதியின் பிடியில் தப்புவோர் எவருமில்லையே!

அப்படி என்றால் நல்லதே நடக்குமே!


கூ.மு.ஷேக் அப்துல் காதர்

22

618

ஓடும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்/

வளியின் வன்முறையில் வசமாய் மாட்டி/

வடிவங்கள் பலவாக மாற்றம் கொண்டு/

வானிலையின் தட்ப வெப்பம் அறிந்து/

வர்ணங்களில் வெவ்வேறு வகையாய் மாறி/


வாழ்நாள் முழுவதும் அலைந்து திரிகின்றீரே/

என்னவளின் காதல் ஆக்கிரமிப்பில் அகப்பட்டு/

உறக்கம் துறந்து உருவம் குலைந்து/

உயிர் மட்டும் உடலில் ஊசலாய்/

உம்மைப் போலவே உலவுகிறேன் மண்ணில்/


ஔவை.

23

654

மலைக் காதலனைத் தழுவுதற்கு  நாணிச்சிவந்தே /  

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ! 

முகாபடாமொத்த முன்னெழிலாள் குறுநகையன்ன.  

நறுமுகையாள் / 

தங்கத் திருமேனியாள் எந்தன் காதலியவளைக் / 

கண்டுவிட்டாள் அவளிடம் போய்ச் சொல்லுங்களேன் /  


பாவையுன்னை நினைந்தே தலைவனவன் வாடுகின்றான்  /  

மலைநாட்டில் மங்கையுனைத் தேடித்தான் திரிகின்றான் /  

காதலியாள் உனைநினைந்து  கடுந்தவந்தான் புரிகின்றான் / 

மோகத்தை விதைத்துவிட்டாய்  தாபத்தில் தவிக்கின்றானென /   

என்மன ஊஞ்சலிலாடும்  என்னவளிடம்தான் கூறுங்களேன்!  


பொன்.சுந்தர பாண்டியன் சோழவந்தான்

24

261

அத்தை மகள் நான் தனித்திருக்க

ஆசை மச்சான் எங்கு சென்றானோ

இரவு விடிந்ததும் ஆற்றங்கரைக்கு வந்துவிடு

ஈதலால் இருவரும் இன்புருவோம் என்றே

உவப்புடன் கூறிச் சென்றவன் வரவில்லையே


ஊர் முழுதும் தேடியும் கிடைக்கலையே

என் மனதின் ஏக்கங்கள் அவனுக்கு 

ஏனோ புரியலையே தவிப்பதும் தெரியலையே

ஓடும் மேகங்களே ஒரு சொல்

கேளீரோ அவனிடம் எந்நிலைக் கூறீரோ !


~ வள்ளல் இராமமூர்த்தி

25

373

ஓடும் மேகமே உரசும் தென்றலே 

ஒரு சொல் நின்று கேளீரோ

பாடும் பறவையே பனி மலர்க்காடே

செவி தனைக் கேட்டுப் போவீரோ

வண்ண மலரே வண்ணத்துப் பூச்சியே


வாசம் வீசும் தென்றலே நில்லாயோ

கானம் பாடும் கருங் குயிலே

எனக்காக ஒரு இசை மீட்டாயோ

காதல் பேசும் கன்னி நிலவே 

மெல்ல வந்து சேதி சொல்வாயா!!


ஜயந்தினி வாகீசன்

26

707

முகில்களின் கூட்டமே முத்தாக அசைந்தே/

முத்தழகி அவளை முத்தாடச் செய்திடு/

வெண்முகிலே நீயும் விரைவாய்ச் சென்றிடு/

வெள்ளந்தி அவளை என்னிடம் சேர்த்திடு/

கார்முகிலே நீயும் கனிவாய்ச் சொல்லிடு/


காளையின் வேதனையை கன்னியிடம் சொல்லிடு/

எனக்கென இருந்திட்ட என்னவளும் தள்ளியிருக்க/

எனக்கென மேகமே தூதுபோ வேகமே/

என்னவளைக் கண்டதும் எந்நிலையைச் சொல்லிடு/

எழிலவள் வந்திட எண்ணங்களை விதைத்திடு/


✍️பா.ச.கண்ணன்

27

201

ஓடும் மேகங்களே உரசும் முகில்களே /

பஞ்சுப் பொதியாய் பறந்து வருவீரோ /

என்காதல்  பைங்கிளியை கண்டு  சொல்வீரோ/

வெண்ணிலவின் ஒளியினிலே மின்னுகின்ற முகிலினூடே /

இன்முகம் காட்டியே இன்பத்தைத் தருகிறாள் /


கண்மூடித் திறப்பதற்குள் காததூரம் ஓடுகிறாள் /6

வானம்பாடியாய் வட்டமிட்டு மயக்கியே மோகத்தைத் /

தருகிறாள் கவிபாடி மயக்கியே அழைக்கிறாள்/8

உள்ளங் கவர்ந்தவளை ஊரெங்கும் தேடுகிறேன் /

குளிர்நிலவே ஒருசொல் கண்டு  கேளீரோ  //


புவனா  சற்குணம்  கனடா

28

564

ஓடும் மேகங்களே பாடும் ராகங்களே 

கேளும் காதல்க் கதை கானமாய் 

கூறும் விடை சொல்லும் பதிலாய் 

மன்னவன் எங்கே மாலை இங்கே 

கன்னி இவள் அவன் வருகைக்காய்.


திங்கள் கடந்து தீண்டி விட்டாய் 

திரையின் மறைவில் கருமுகில் பின்னே 

நீல நிறத்தில் நீந்திச் சென்று 

மணியின் ஓசை கேட்டே மகிழ்ந்தேன் 

மழையாய்ப்  பொழிய சூடும் தணிந்ததே..


இராசையா கௌரிபாலா.

29

697

ஆற்றில் குளத்தில் தாகம் தீர்த்து / 

காற்றின் போக்கில் போகும் மேகங்களே / 

நேற்று என்னைத் தழுவிய நல்லாள் / 

சாற்றினாள் நிச்சயம் வருவேன் என்று / 

மாற்றுச் சிந்தனை அற்ற உயிராய் / 


நாற்றைப் போலே ஆடி நிற்கிறேன் / 

தேற்றக் கூட ஆளில்லா நிலத்தில் / 

கூற்றம் கொண்டு போகும் முன்னே / 

ஆற்றின் மீனாய் துள்ளிக் குதித்தே / 

ஆரணங்கை வரவே  சொல்லி செல்வீராக...! 


முனைவர் பெ.வெற்றிநிலவன், குடந்தை...

21

668

ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ/

ஒன்றாக ஒருயிராய் உலகினில் வாழ்ந்திடவே/

ஓராயிரம் ஆசைகளை உள்ளுக்குள் வரைந்திட்டேன்/

குறும்பான அரும்பாக துள்ளிய காலமுதல்/

வண்ணப் பருவச்சிட்டாய் பறந்திடும் பாவையினை/


ஆலயமாம் மனதிலே குடி வைத்து/

தரிசனம் தந்திடவே தவமும் புரிகின்றேன்/

தணியாத காதலினை பதித்தும் வைத்திட்டேன்/

தாங்கிடா வலியினை தணித்திடும் அருமருந்தாய்/

தாவணி தேவதையை தேடுவதை கூறுவீரோ/


ஏஞ்சல்சோபிதா

22

221

உறவுடன் தொடர்ந்தேன் உயிருள்ள வாழ்வு

பிறந்த போதே பிறவிப் பலனடைந்தேன்

திறந்த புத்தகமாய் திசைமாறிய வாழ்வு

மறந்த கனவாகி மாயமாய் மாறியதே

சிறுகுழந்தையாய் கண்ட சின்னக் கனாக்கள்


வெறுப்புடன் இன்று வேதனையாய் காண்கிறேன்

ஆலயத் தரிசனத்தில் ஆறுதல் அடைந்திட

ஆலயங்கள் சென்று ஆரத்தி செய்கிறேன்

மேகமே என்னுள் மொத்தமாய் வருவதேனோ்?

மேகத்து தூரிகையாய் மெளனத்தை வரைவதேனோ?


புஷ்பா கிறிஸ்ரி

23

247

நாணத்தால் மேகத்தின் ஊடே ஒளிந்து /

என்னை கொள்ளை கொண்ட பேரழகே /

உன்னழகில் மயங்கி ஊரெல்லாம் திரிந்தேன்/

உன் கண்ணழகில் மயங்கி கிறங்கித் /

தான் போனேன் உனது தேனூறும் /


இதழை சுவைத்திடத் தான் நினைத்தேன் /

உனது கன்னத்தில் முத்தமிட்டு மகிழ்ந்திடதான்/

போனேன் நீயோ என் சொல் 

கேளாமல் ஓடி ஒளிந்து கொள்கின்றாய்/ 

காலமெல்லாம் உன்னுடனே வாழ்ந்திடவே ஆசை /


த.காமராசு. தாராசுரம் கும்பகோணம்

24

613

வெண்மேக கூட்டங்களே கொஞ்சம் நில்லுங்கள்/

என்னவரைப  பார்த்து நாளாச்சு  மேகமே.../

தூது  போவாயா சேதி  சொல்வாயா/

அவரைப்  பார்க்காமல் நான்  நானாகயில்லை/

தொலைந்துப்   போன உறவுகளை  புதுப்பிப்பாயா/


பறந்து  விரிந்த உலகில் தனித்திருக்கிறேன்/

ஆறுதலாக  முத்த மழை  பொழிவாயா/

கற்பனை  உலகில் வாழ்கிறேன்  மேகமே/

பூவாக  பொழியும் மழையிலே  நனைந்தால்/

நானும் மகிழ்வேன் உள்ளமும்  குளிரும்/


ஜெயாசந்திரமோகன்




போட்டி முடிவுற்றது

25

483

மஞ்சளொடு குங்குமமும் மதிதீட்டும் குலமாதர்/1

வஞ்சனைகள் அறியாத விவசாயப் பெருமக்கள்/

பஞ்சத்தை அறியாமல் பசியென்று நிற்காமல்/3

பிஞ்சுநிலாக் குழந்தைகளைப் பேணத் தவிர்க்காமல்/4

நஞ்சைகளும் புஞ்சைகளும் நன்றாக விளையவே/5


விஞ்சியே அழிவுதரும் வெள்ளமாய்ப் பெருகாமல்/6

கொஞ்சுதமிழ் மக்கள் குறையற வாழ்வே/7

கொஞ்சமாய்ப் பெய்யாமல் ஓடும் மேகங்களே/8

கெஞ்சுகிறோம் ஒருசொல் கேளீரோ நலம்பெற/9

நெஞ்சுவக்கப் பெய்திடுவீர் நிலையாய்க் காத்திடுவீர்/10


ஆ ச மாரியப்பன் புதுக்கோட்டை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Pages